Friday, July 30, 2010

அரண்மனை ........................(தாய்லாந்து பயணம் பகுதி 10)

அட! வாங்க உள்ளே. உடம்பு எப்படி இருக்கு? நலமா?
முதலில் நம்மை வரவேற்பவர் கண்ட்ரி டாக்குட்டர். இவர்தான் தாய்க்கு மருந்து மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை செய்த 'தாய் தன்வந்திரி'! மருந்து அரைக்க எவ்வளோ பெரிய குழவியும் அம்மிக்கல்லும் வச்சுருக்காரு பாருங்களேன்!


சொகம்தானுங்கன்னு சொல்லிக்கிட்டுத் திரும்புனா...............வானத்துக்கும் பூமிக்குமா(ச்சும்மா ஒரு பேச்சுக்கு) நின்னு மிரட்டும் தோரணையில் த்வாரபாலகர்கள் வாசலுக்கு உட்புறம். வெவ்வேற இடங்களிலும் ரெவ்வெண்டு பேரா பக்கத்துக்கொன்னா நிக்கறாங்க. அச்சுலே வார்த்த மாதிரி ஒன்னுபோல இருந்தாலும் வண்ணங்கள் மட்டும் ஜோடிக்கொன்னுன்னு இருக்கு. இன்னும் கொஞ்சம் கவனிச்சுப்பார்த்தால் தலையில் கமுத்தி வச்சுருக்கும் ஹெல்மெட் டிசைன்கூட வெவ்வேறதான். க்ரீடமுன்னு சொல்லலாமுன்னா ராஜா முதல் காவலாளிவரை கிரீடம் வச்சுருப்பாங்களா என்ன? இல்லே.... எல்லோரும் இந்நாட்டு மன்னர் வகையோ?

இந்த வர்ணம் பற்றியும் ஒன்னு சொல்லிக்கணும்.இங்கே இதுக்கு முன்னே இருந்த அரசர்கள் எல்லாம் கலர்கோட் ( colour code) போல ஆளுக்கொன்னு நிறமுன்னு பிரிச்சு வச்சுருந்தாங்க. அவுங்க சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களும் ச்செடிகளும் கூட அந்தந்த நிறத்தில்தான்.

முதலாம் ராமா ----பச்சை

ரெண்டாம் ராமா --வெள்ளை

மூன்றாம் ராமா-- மஞ்சள்

நான்காம் ராமா --- நீலம்

அஞ்சாம் ராமாவுக்கு இந்த ஐடியா பிடிக்கலையோ என்னவோ.....நிறங்களைப்பற்றி ஒன்னும் காணோம். ஆனா இவரோட திட்டம் வேற ஒன்னு. பெரிய குடும்பஸ்த்தர். 77 பிள்ளைகள். 44 பொண்ணு 33 பையன். இவர் கலைப்பொருட்களில் ஆர்வமுள்ள கலைஞர். பலநாடுகளில் இருந்து அலங்காரப்பொருட்களைக் கொண்டுவந்து கோவிலில் அடுக்கி வச்சுருக்கார்.

தமிழ்நாட்டு அரசர் ஒரு கலர் கோட் வச்சுருப்பது யாருக்காவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல

சரி சரி இது இருக்கட்டும். கொஞ்சூண்டு சரித்திரம் பார்க்கலாம். இந்த அரண்மனையைக் கட்டுனவர் அரசர் முதலாம் ராமா அவர்கள். வருசம் 1782. இங்கே வருமுன் தலைநகரம் தொன்புரி என்ற இடத்தில் இருந்துச்சு.
இது சாவ் பராயா ஆற்றின் அக்கரை. அதுக்கும் முன்னால் அயுத்தியாதான் தலைநகரம். (அடடா..... என்ன ஒரு பொருத்தம் பாருங்க. ராமன் இருந்த இடம் அயோத்தியா இல்லையோ!) பர்மாகூட நடந்த போரினால் அப்ப இருந்த அரசர் டாக்சின் அயுத்தியாவை விட்டு வெளியேறும்படியா ஆச்சு. இவர்தான் தொன்புரி வம்சத்தின் கடைசி அரசர். சக்ரி வம்சம் அதுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்துச்சு. அவுங்கதான் பட்டம் சூட்டிக்கிட்டதும், ராமா ன்னு பெயர் வச்சுக்கிட்டவங்க. (இப்போது இருக்கும் அரசர் ஒன்பதாம் ராமா)

அரண்மனை வளாகம் மொத்தம் 60 ஏக்கர். இங்கே ராஜகுடும்பத்துக்குன்னு வசிக்கும் மாளிகைகள் கட்டுனாங்க. அரசாங்க அலுவல்கள் பார்க்கத் தனி இடங்கள். அரசவை இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா கட்டிடங்கள் வளர்ந்துகிட்டே போச்சு. சாமி கும்பிட ஒரு கோவில் கட்டி அதுலேதான் மரகத புத்தரைப் பிரதிஷ்டை செஞ்சாங்க. இந்தக் கோவிலுக்கு WAT PHRA KAEW ன்னு பெயர். வாயிலே நுழையலைன்னா பரவாயில்லை. எமரால்ட் புத்தர்ன்னு சொன்னால் ஆச்சு.


மூணு வாசல் உள்ள முகப்பு. சுத்துச்சுவர்கள் எல்லாம் கண்ணாடிச்சில்லுகள் பதிச்சு அழகான வர்ணங்களால் டிஸைன் செஞ்சுருக்காங்க. சுத்திவர அடிப்பாகம் முழுக்க தங்க கருடன்கள் கையில் ரெவ்வெண்டு சர்ப்பம் பிடிச்சுக்கிட்டு ஒன்னோட ஒன்னு கை கோத்தமாதிரி நிக்குதுங்க.


முகப்பில் நடுவாசலுக்கு வெளியே ஒரு பெரிய வெண்கலக் கும்பாவில் புனித நீர் வச்சுருக்காங்க. பக்கத்தில் தாமரை மொட்டுகள் இரு தட்டுகளில் அந்த பூவின் காம்பைப்பிடிச்சு அந்த புனித நீரில் தொட்டு அந்த நீரைத்தலைக்குத் தெளிச்சுக்கணும். கோவிலுக்கு வந்த புண்ணீயம் நம்ம கணக்கில் ஏறும் அதே சமயம் செஞ்ச பாவங்கள் எல்லாம் போச்!
கம்போடியாவில் இருந்து கொண்டுவந்த வாலில்லா சிங்கங்களில் ஒன்னு.

இடப்பக்கம் உள்ள வாசலில் நுழைஞ்சு அவரை தரிசனம் செஞ்சுக்கிட்டு வலது பக்க வாசலில் வெளி வரணும். உடைக்கட்டுப்பாடுகள் இருக்கு. அதெல்லாம் நாம் கவலைப்படவேண்டியதில்லை. வெள்ளைக்காரர்கள் தான் கவனிக்கணும். உடலை மூடும் உடை சரியாக இல்லாதபட்சத்தில்
கோட்டை வாசலிலேயே விஷயத்தை விளக்கிச் சொல்லிடறாங்க. அங்கே கிடைக்கும் சராங்கை வாங்கி இடுப்பில் கட்டிக்கொண்டும் உடலில் போர்த்திக்கொண்டும் வரலாம். உங்க பாஸ்போர்ட்டையோ இல்லை க்ரெடிட் கார்டையோ அங்கே கொடுத்துட்டு துணிகளை வாங்கிக்கலாம்.

மரகதமுன்னு சொல்றாங்களே தவிர இவர் அசல் மரகதக் கல்லில் செய்யப்படவில்லை. பச்சை நிறமுள்ள ஜேட் கல்லில் செதுக்கி இருக்காங்க. 66 செ.மீ உயரம். அகலம் (அவர் ரெண்டு முழங்கால்களுக்கிடையில்) 48.3 செமீ. புத்தர் மறைவுக்குப்பின் ஐநூறு ஆண்டுகள் கழிச்சு இவரை உருவாக்கினாங்களாம். இந்தியாவில் செதுக்கப்பட்டதோன்னு கூட ஒரு ஐயம் இருக்கு. ஒரு சமயம் நடந்த உள்நாட்டுப் போரில் இருந்து இவரைக் காப்பாத்தனுமுன்னு சிலோனுக்கு அனுப்பிட்டாங்களாம். அதுக்குப்பிறகு 457 வது வருசம் பர்மா அரசர் அனுருத் சிலோனுக்கு அவரது ஆட்களை அனுப்பி, எங்க நாட்டுலே புத்தமதத்தைத் தழைக்க வைக்கப்போறோம். சிலையை எங்களுக்குத் தாங்கன்னு வேண்டுனதும் அவுங்க எடுத்துக் கொடுத்துருக்காங்க. பர்மாவுக்குப் புறப்பட்ட கப்பல் நடுவழியில் புயலில் சிக்கி, சிலை எப்படியோ கம்போடியா ( காம்போஜம்) போயிருச்சு. தாய்கள் கம்போடியா அங்கோர் வாட்டைக் கைப்பற்றியதும் சிலை வந்து சேர்ந்துச்சு தாய்லாந்துக்கு. இந்த கலாட்டாவில் இவரை யாரோ சுண்ணாம்பும் மண்ணும் கலந்த கலவையில் மறைச்சுவச்சு அது இறுகி ஒரு பாறையா ஆகி இருக்கு.

1454வது வருசம் அந்த பெரிய காரைப்பாறையில் மின்னல்தாக்கி அது பிளந்துருக்கு. அதுக்குள்ளே இவர் இருந்தததைக் கண்டுபிடிச்சாங்களாம் புத்த பிக்குகள். பூமியில் புதைச்சு பசுவின் காலிடறி, இல்லே அரசனின் ரதம் இடறி, அதுவும் இல்லேன்னா கனவில் இன்ன இடத்தில் புதையுண்டு இருக்கேன்னு சேதி அனுப்பி இப்படியெல்லாம் நாம் கேள்விப்பட்ட 'கதைகளா' இல்லாம இங்கெல்லாம் மின்னல் தாக்கியோ இடி இறங்கியோ வெளிப்பாடுகள் நடக்குது. முந்திகூட அஞ்சரை டன் தங்க புத்தரும் இப்படித்தானே வெளிப்பட்டார் இல்லையா?

அரசர் தலைநகரை மாற்றும்போதெல்லாம் இவரும் கூடவே அயூத்தியா, தொன்புரி, ரத்னகோஸின்னு மாறிக் கூடவே வந்துருக்கார். ரத்னகோஸின் என்பது பாங்காக்கின் பழைய பெயர்.

வருசத்து மூணு முறை இவருக்கு வெவ்வேற உடுப்புகள் போட்டு அலங்கரிக்கறாங்க. நினைச்சபோது உடுப்பை மாற்றிட முடியாது. அரண்மனை ஜோசியர்கள்/ பண்டிதர்கள் நல்ல நாள், முகூர்த்தம் எல்லாம் பார்த்துக் கொடுக்கணும்.

கோடைக்கு கூம்பு க்ரீடம், கழுத்திலிருந்து கால்வரை தங்க நகைகள்

குளிர்காலத்துக்குத் தங்கக்கம்பிகளாலும் தங்க மணிகளாலும் பின்னிய மெல்லிய வலைபோன்ற கம்பி உடை

மழைகாலத்துக்கு சஃபையர் கற்கள் பதிச்சு எனாமல் வேலைப்பாடுகளுமா உள்ள தங்கத்தொப்பி, இடதுதோளை மூடி இருக்கும் தங்க உடுப்பு பாதங்களில் தங்க ஆபரணம் இப்படி. வலதுதோள் மட்டுமே பச்சை நிறத்தைக் காமிக்குமாம்.

கடிகாரச்சுற்றில்: கோடைகால உடை, எமரால்ட் புத்தர் அபிஷேகத்துக்கு முன், குளிர்கால உடை, மழைக்கால உடை.



இந்தக் கோவிலைப் பற்றிய ரெண்டுவருசத்துக்கு முந்தி எழுதுன இடுகைகளின் சுட்டிகள் இதோ

அரண்மனையில் ஒரு மரகதம்

மரகத புத்தர்


கருவறைக்குள் படம் எடுக்க அனுமதி இல்லை. ஆனால் வெளிவராந்தாவில் இருந்து zoom செய்து எடுத்த படம் இது.

இங்கே எழுதியுள்ள விவரங்கள் கோவில் வராந்தாவில் விற்கும் தலபுராணம் ( 20 பத்) புத்தகத்தில் இருந்து பெறப்பட்டவை. மேலும் முக்கால உடை அலங்காரங்கள் படங்கள் தனியாக ஒரு செட் ( 4 படம்) 80 பத்துக்கு கிடைக்குது. விற்கும் தொகை முழுசும் கோவிலைப் புதுப்பிக்கவாம். நம்மாலான கைங்கர்யம்!

அரண்மனையில் இன்னும் ஏராளமாப் பார்க்கணும். ஒவ்வொன்னாப் பார்த்துக்கிட்டே போகலாம், வாங்க.

தொடரும்............................:-)

34 comments:

said...

ஆசையை ஒழிக்கச்சொன்ன புத்தர்கோவிலில் தங்கமா மின்னுது :-))))

said...

"தமிழ்நாட்டு அரசர் ஒரு கலர் கோட் வச்சுருப்பது யாருக்காவது நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பல்ல" ம்ம்ம் ஒருத்தர் மட்டும் இல்லை.

முந்நாள், இந்நாள் எல்லாம்தான். :-))

அந்த வாலில்லா சிங்கம் பக்கத்தில இருக்க Sign போர்ட் பார்த்தா, நம்மள அது வாய்க்குள்ள போக ஶொல்லகிறமாதிரி இருக்கு :-)))

said...

தங்கமோ தங்கம்.!!!
ஊருக்குத் திரும்பினதும் கண்ணில எல்லாமே மஞ்சளாத் தெரிஞ்சுதா:)

said...

அம்மி குழவியும் தன்வந்திரியும் ஆகா .. ம்

பச்சை மஞ்ச , பிங்க் தமிழன்னு பாட்டு வருது.. அப்ப அடுத்து..

said...

புத்தருக்கு அந்தந்த காலநிலைக்கு ஏற்ற உடை மிகவும் நல்ல யோசனையா இருக்கு டீச்சர்.

said...

அழகான படங்கள். தெரியாத தகவல்களை தெரிந்துக்கொண்டேன். நன்றி!

said...

ஏன் இட்லி வடையெல்லாம் பிடிக்காதா?

அதில் இணைக்கும் வழக்கம் இல்லையா?


அழகான படங்கள். தெரியாத தகவல்களை தெரிந்துக்கொண்டேன். நன்றி!

ப்ரியாவுக்கு நன்றி. இந்த பதிவு மட்டுமல்ல ஒவ்வொரு பதிவுக்குமே இதையே போட்டுக் கொள்ளலாம்.

said...

நம்ம ஊரு சாயல் ரொம்பத் தெரியுதே.

said...

உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படிக்கும்போது, உங்கள் மேல் பொறாமை உண்டாகிறது. எத்தனை விசாலமான பார்வை, கூர்ந்த நோக்கு!

நானும் ஐந்தாறு முறை பாங்காக் போயிருக்கிறேன். பார்த்திருக்கிறேனென்று சொல்லமுடியாது! நான் பார்த்ததெல்லாம் ஏர்போர்ட், ஹோட்டல், பிஸினெஸ் பார்ட்னர்களின் அலுவலகங்கள், திரும்ப ஹோட்டல், ஏர்போர்ட்......இவ்வளவு தான்! இப்போது நினைத்துப்பார்த்தால், மனசுக்கு சங்கடமாக இருக்கிறது. என்ன செய்ய? பல அனுபவங்களை தொலைத்துவிட்டேன்!

தொடருங்கள்.... நன்றாக இருக்கிறது.

பாரதி மணி

said...

அஞ்சாம் ராமாவுக்கு -வேற திட்டம் இருந்துச்சு. தமிழ் நாடு அரசர் கலர் கோட் வாசிருப்பது ஞாபகம் வந்தால் நான் பெறுப்பில்லை என்று போகிற போக்கில் சிக்ஸ்ராக அடித்திருக்கிறீர்கள். இயல்பாக இழையோடும் நகைச்சுவை ரசிக்கவைக்கிறது.

said...

உங்கள் கட்டுரைகளை தொடர்ந்து படிக்கும்போது, உங்கள் மேல் பொறாமை உண்டாகிறது. எத்தனை விசாலமான பார்வை, கூர்ந்த நோக்கு!


பாரதி மணி சொல்லியிருப்பது உங்களுக்கான பாராட்டுரைகள் மட்டுமல்ல. இது போன்ற இடுகையில் படிக்கும் போதும் இத்தனை விசயங்களை கவனிக்க முடியுமா? என்று யோசிக்க வைக்கும்.

முன்பெல்லாம் 400 பக்கங்கள் உள்ள புத்தகத்தை ஒரே மூச்சில் வாசிக்க முடியும். ஆனால் எழுதத் தொடங்கிய பிறகு பத்து பக்கங்கள் தாண்ட முடியவில்லை. வெளி இடங்களிலும் கவனிப்பதும் இதே போலத்தான்.

அதைத்தான் நீங்கள் மறைமுகமாக செய்து கொண்டு இருக்கீறீர்கள்.

said...

அரண்மனை, துவாரபாலகர்கள் நிறங்கள் வர்ணனை அழகு.

said...

தமிழகத்தில் மன்னராட்சியா? அப்ப கோட்டையெல்லாம் புதுசா கட்டவேண்டிவருமே!!

said...

தாமதமான பதிலுக்கு முதலில் எல்லோரும் மன்னிக்கணும். இங்கே மின்சாரமும், அகலப்பட்டை இணையத் தொடர்பும் பாடாய்ப் படுத்துகிறது.

நிலையாமை என்பது இங்கே கண்கூடு:(

ஒரு நிமிடம் இருக்கு அடுத்த நிமிடம் இல்லை.

இருக்கு.....இல்லை.....

said...

வாங்க அமைதிச்சாரல்.


//ஆசையை ஒழிக்க...//


அது தனக்குத்தானே சொல்லிக்கிட்டதாம்!!!!

said...

வாங்க டாடி அப்பா.

சிங்கம்கூட சிலசமயம் வேணாமுன்னு நம்மை விட்டுரும். ஆனால்..... 'அ.வியாதிகள்' விடாது.

said...

வாங்க வல்லி.

மஞ்சக் காமாலை இனி நெருங்கவே முடியாது. ஏற்கெனவே ஏகப்பட்ட மஞ்சள்:-)))))

said...

வாங்க கயலு.

அம்மியைப் பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு எனக்கும் வியப்புதாம்:-))))

said...

வாங்க சுமதி.

'காலம்' அவரையும் விடலை பாருங்களேன்:-))))

said...

வாங்க ப்ரியா.

எங்கே ரொம்ப நாளா ஆளையே காணோம்?

ஆணி அதிகமோ?

said...

வாங்க ஜோதிஜி.

வடை பிடிக்காமலென்ன? அங்கெல்லாம் போய் ஆஜர் கொடுக்கணுமுன்னா டெம்ப்ளேட்லே கைவைக்கணும்போல இருக்கே.

வம்பு ஒத்து நைனான்னு சும்மா இருந்துடறதுதான்.

சுலபமா சேர்க்கமுடிவது எதுன்னு தெரியலையே!!!!

said...

நன்றி மரியா!!!

வராதகவுஹ எல்லாம் வந்துருக்கீங்க:-)))))

said...

வாங்க விருட்சம்.

ரிச்சுவல்ஸ் எல்லாம் பார்க்கும்போது ஊருலே இருப்பதுபோலத்தான்.

பெயர்களும் இப்படித்தான். ஸ்பெல்லிங் மட்டும்தான் வேற!!!

said...

வாங்க பாரதி மணி ஐயா.

வணக்கம். நலமா?

இதுக்குத்தான் பிஸினஸ்ஸையும் ப்ளஷெரையும் ஒன்னாச் சேர்த்துக்கக்கூடாது என்பது:-)))

கோபால் ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை போயிட்டு வர்றார். விமானம் வீட்டு இறங்கி பெட்டிகளை எடுக்கப்போகும் வழியில் அழகழகான படங்கள், காட்சிகள் இருக்கேன்னு வியந்து அனுபவிச்சு இவரிடம் எவ்வளோ நல்லா இருக்குன்னு சொன்னால்.... எங்கேன்னு முழிக்கிறார். குதிரைக்கு மட்டுமா கண்ணில் பட்டை?

said...

வாங்க ரிஷபன்மீனா.

நம்ம பொழைப்புத்தான் சிரிப்பாச் சிரிக்குதேன்னு அங்கங்கே கொஞ்சம் தூவி விடறதுதான்:-)))))

said...

ஜோதிஜி.

ரொம்பச்சரி.

எழுத ஆரம்பிச்சபிறகு அல்லும்பகலும் இடைவிடாம எழுதிக்கிட்டே இர்க்கோம் மனசிலே. அதைத் தட்டச்சு செய்ய உக்காரும்போதுதான் அருமையா அழகா மனசில் அமைந்த சொல்லாட்சி மறந்து போயிருது:(

சும்மா வாசிச்சுக்கிட்டே போற காலம் போயிருச்சு. வரிகளுக்கு நடுவில் சிந்தனையை வேற பக்கம் திருப்பி யோசிக்க வைக்குது இக்கால எழுத்துக்கள்!

காலம் மாறிப்போச்சு !!!

said...

வாங்க மாதேவி.

ஒரே மூச்சுலே விட்டதைப் ப(பி)டிச்சீங்க போல!!!!

கூடவருவதற்கும் அர்ரியர்ஸ் முடிச்சதுக்கும் நன்றிப்பா:-))))

said...

வாங்க குமார்.

ஒரு கோட்டையை விட்டாலும் மறு கோட்டைக் கட்டிட்டாங்களே:-))))

தோட்டாதரணி இருக்கும்போது கவலை ஏன்?

வீரவாள், (மலர்) க்ரீடம் எல்லாம் ரெடி!

said...

எல்லாமே "ஜாஜ்வல்யமா" இருக்கு!

said...

தாமதமான பதிலுக்கு முதலில் எல்லோரும் மன்னிக்கணும். இங்கே மின்சாரமும், அகலப்பட்டை இணையத் தொடர்பும் பாடாய்ப் படுத்துகிறது.

நிலையாமை என்பது இங்கே கண்கூடு:(

ஒரு நிமிடம் இருக்கு அடுத்த நிமிடம் இல்லை.

இருக்கு.....இல்லை.....

நான் மட்டும் தான் பாவம் செய்தவன் என்று நினைத்தேன். நீங்களுமா? அங்குமா?

said...

வாங்க தருமி.

இருக்காதா பின்னே? எல்லாம் தங்கமுல்லே,(சாமி) உடுப்பு உள்பட!!!!

said...

ஜோதிஜி,

சென்னையே மேலுன்னு இருக்கு. சொல்லிட்டாவது பவர்கட். இங்கே யாரும் யாரையும் கண்டுக்கறது இல்லை:(

தலையணையில் தல சாய்ச்சதும் கரண்ட் போயிரும்.

கூடிய சீக்கிரம் 2 பில்லியனாக்கும் முடிவோ என்னவோ:(

Anonymous said...

நண்பா. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.

நன்றி
யாழ் மஞ்சு

said...

ஆரம்பமே அசத்தல் கண்ட்ரி டாக்குட்டர் உடன்.
வழமைபோல அருமையான புகைப்படங்களுடன் எங்களை அழைத்துச் சென்று ஆனந்திக்க வைத்ததற்கு நன்றி.